தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் (NCPI) படி, இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் (Headline Inflation) கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 2.4 சதவீதமாகக் காணப்பட்ட நாட்டின் முதன்மைப் பணவீக்கமே, ஏப்ரல் மாதத்தில் இந்தளவு உயர்வடைந்துள்ளது.
திணைக்களத்தின் அறிக்கையின்படி, சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகளில் சிறிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது: அதன்படி, மார்ச் மாதத்தில்:0.7 சதவீதம், ஏப்ரல் மாதத்தில்: 1.1 சதவீதம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதம் 4.7 சதவீதம் வரை அதிகரித்ததற்கு, உணவற்ற பிரிவில் (Non-food items) ஏற்பட்ட அதிரடியான விலை உயர்வே பிரதான காரணம் என்று புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
போக்குவரத்து, மின்சாரம், கல்வி மற்றும் இதர சேவைகளை உள்ளடக்கிய உணவற்ற பிரிவின் பணவீக்கம் ஒரே மாதத்தில் இருமடங்காக (7.8% வரை) அதிகரித்துள்ளமையினாலேயே, தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் பாரிய உயர்வைச் சந்தித்துள்ளது.












