ஹட்டன் – டிக்கோயா நகரில் தனியாக வசித்துவந்த வயோதிப தம்பதியர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
டிக்கோயா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் குறித்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை உயிரிழந்தவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருவதுடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இந்த வர்த்தக நிலையத்தில் வியாபாரம் செய்து வந்த நிலையில், தற்போது கடையை மூடிவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிள்ளைகள் அவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்காமையினால், அயலவர்களுக்கு அறிவித்த நிலையில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த வர்த்தக நிலையத்திற்குள் இனந்தெரியாதோர் உட்பிரவேசித்து இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













