மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் ஏ அணி தொடரினை ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து மகளீர் ஏ அணி ஆறுதல் வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது.
நேற்றைய 3ஆவது போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை பறிகொடுத்த நியூஸிலாந்து மகளிர் ஏ அணிக்கு நேற்றைய வெற்றி ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் ஏ அணி 16.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 78 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதில் அணித் தலைவி சத்யா சந்தீப்பனி அதிகப்பட்சமாக 16 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
அத்துடன் சஞ்சனா காவிந்தி, சுமுது நிசன்சலா ஆகிய இருவரும் தலா 15 ஓட்டங்களையும் பியூமி வத்சலா 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஜெஸ் வொட்கின் 4 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கேய்லி நைட் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் ஏ அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் ப்ரூ கெட்டொன் ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் கேட் அண்டசன் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் ப்ரமுதி மெத்சரா 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சச்சினி நிசன்சலா 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















