முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’ போராட்டக் களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்தச் சம்பவத்தின் சந்தேகநபராக தேசபந்து தென்னகோனை பெயரிடுமாறு சட்ட மாஅதிபர் அனுப்பிய கடிதத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ள விபரத்தை அறிவித்ததை அடுத்து, இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
















