சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளாக சிறையில் இருந்த அப்துல் ரஹீம் எனும் கேரள நபர், அம்மாநில மக்கள் திரட்டி தந்த 34 கோடி ரூபாய் நிதியுதவி மூலம் விடுதலை பெற்று நேற்று கேரளா திரும்பினார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர், வேலைக்காக கடந்த 2006-ல் மேற்காசிய நாடான சவுதி அரேபியா சென்றார்.
அங்கு அவர் கவனித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன், எதிர்பாராதவிதமாக உயிரிழந்த நிலையில் இதுதொடர்பான வழக்கில் அப்துல் ரஹீமிற்கு சவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் 34 கோடி ரூபாய் இழப்பீடு தந்தால் அவரை மன்னிப்பதாக அறிவித்தனர்.
இந்த பணத்தை தர, 2024, ஏப்ரல் 18 வரை காலக்கெடு வழங்கப்பட்டது.
ஆனால், கேரள தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பலரின் உதவியோடு சமூக வலைதளம் வாயிலாக, வெறும் 4 நாட்களில் 34 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
சவுதியில் மகனை இழந்த குடும்பத்தினருக்கு, வெளியுறவு அமைச்சகம் மூலம் அந்த பணம் வழங்கப்பட்டது.
அவர்கள் மன்னிப்பு வழங்கியதால், அப்துல் ரஹீமின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும், பணியில் அலட்சியமாக இருந்து சிறுவன் உயிரிழக்க காரணமாக இருந்ததற்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.
அந்த தண்டனை காலம் மே 19ல் முடிந்தது.
இதையடுத்து சவுதி சிறையிலிருந்து சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்ட அப்துல் ரஹீம், நேற்று கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.
அவரை, தொழிலதிபர் பாபி செம்மனுார் மற்றும் உறவினர்கள் நேரில் வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து நேராக தன் வீட்டிற்குச் சென்ற ரஹீம், வாசலில் 20 ஆண்டுகளாக தனக்காக காத்திருந்த வயதான தாயை கட்டிப் பிடித்து கதறி அழுதார்.














