யானை – மனித மோதல் முகாமைத்துவத்திற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை வரைவாக்கம் செய்வதற்கான படிமுறைகளை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட விருத்தி, காடழிப்பு போன்ற காரணங்களால் காட்டு யானைகளின் வழக்கமான புலம்பெயர் இடைமாறு வழிகள் அழிந்து போனமை மற்றும் அவர்களுடைய புகலிடங்கள் அழிக்கப்பட்டமையால் இலங்கையின் 25 மாவட்டங்களில் 19 மாவட்டங்கள் மற்றும் 341 பிரதேச செயலகப் பிரிவுகளில் 134 பிரிவுகளில் நீண்டகாலமாக யானை – மனித மோதல் தொடர்ந்து வேகமாக அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட காட்டு யானைகள் கணிப்பீட்டுக்கமைய 7,450 காட்டு யானைகள் இருக்கின்றமை கணிப்பிடப்பட்டுள்ளது.
யானை – மனித மோதல்களால் ஆண்டுதோறும் மனித உயிர்களும் காட்டு யானைகளும் குறிப்பிடத்தக்களவு தொகை உயிரிழப்பதாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், காட்டு யானைகளால் வருடாந்தம் ஆயிரக்கணக்கான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுகின்றமையும் பதிவாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் ‘இலங்கையின் யானை – மனித மோதலைக் குறைப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டம்’ தயாரிக்கப்பட்டிருப்பினும், தற்போது யானை – மனித மோதல் நிலைமைகள் அக்காலத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமடைந்துள்ளது.
அதனால் அதற்குப் புதிய தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, யானை – மனித மோதல் முகாமைத்துவத்திற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை வரைவாக்கம் செய்வதற்கான படிமுறைகளை மேற்கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.











