செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையான நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய ‘சுயாதீன சர்வதேச விசாரணை’ நடத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
செம்மணி மனித புதைகுழி அமைந்திருந்த பகுதிக்கு அண்மையில் நீதி அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இதுகுறித்த விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இதுகுறித்துத் தனது நிலைப்பாட்டை வெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், அமைச்சரின் வருகையுடனும் வெறும் வாக்குறுதிகளுடனும் மட்டும் இந்த விசாரணைகள் முடக்கப்பட்டுவிடக் கூடாது எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, கிரிஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையிலுள்ள சோமரத்ன ராஜபக்ஷ, பல ஆண்டுகளாகவே செம்மணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் இரகசியமாகப் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருகிறார்.
செம்மணிக்கு மேலதிகமாகக் கொழும்புத்துறை மற்றும் அரியாலை உள்ளிட்ட பகுதிகளிலும் இத்தகைய மனிதப் புதைகுழிகள் இருப்பதாக அவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
எனவே, இச்சம்பவங்களுடன் தொடர்புடைய துல்லியமான தகவல்களை வழங்கக்கூடிய சோமரத்ன ராஜபக்ஷவை உடனடியாக யாழ்ப்பாணத்திற்கு நேரில் அழைத்து வந்து, அவர் அடையாளம் காட்டும் அனைத்து இடங்களிலும் விரிவான அகழ்வாராய்ச்சிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட 200 இற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து இதுவரை பொதுமக்களுக்கோ அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கோ எந்தவொரு விபரமும் வெளிப்படுத்தப்படவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.
தற்போதைய நிலவரப்படி செம்மணிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளது. இது இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரியதொரு மனித உரிமைச் சிக்கலாக (Human Rights Issue) மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் கண்டெடுக்கப்படும் இத்தகைய பழமையான மனித எச்சங்களின் (Human Remains) அடையாளங்கள், அவை புதைக்கப்பட்ட காலப்பகுதி மற்றும் டி.என்.ஏ (DNA) விபரங்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்நாட்டில் போதுமான அளவில் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாகவே, சர்வதேச நிபுணர்களின் நேரடிக் கண்காணிப்புடன் கூடிய சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
“இந்த விசாரணையின் முதன்மை நோக்கம் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவது மட்டுமல்ல; காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவதும், எதிர்காலத்தில் இத்தகைய கொடூரமான மனிதப் பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான சர்வதேச வழிமுறைகளை உருவாக்குவதுமாகும்” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
எனவே, மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் மிகவும் வலுவான குரலை எழுப்ப வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதன்போது உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.














