ஈரானுடன் நிலுவையிலுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஏதுவான முதற்கட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (J.D. Vance) சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
அமெரிக்கா – இஸ்ரேல் தரப்புக்கும், ஈரானுக்கும் இடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அண்மைக் காலமாகத் தீவிரமடைந்து வந்த இராணுவ பதற்றத்தைத் தணிப்பதே இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் முதன்மைக் குறிக்கோளாகும்.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ‘ஹோர்மூஸ் நீரிணையை’ முழுமையாக மூட ஈரான் முடிவு செய்ததுடன், அந்தப் பாதையைக் கடக்கும் வணிகக் கப்பல்களுக்குப் புதிய வரிகளை விதிக்கவும் திட்டமிட்டது.
உலகளாவிய பொருளாதார மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நெருக்கடிக்குத் தற்போதைய சுவிஸ் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயலப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இன்று ஈரானிய அரசாங்கத்தின் மிக முக்கிய தூதுக்குழுவினரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் குவாலிபாப் (Mohammad Bagher Ghalibaf), வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) ஆகியோருடன் ஈரானிய மத்திய வங்கி மற்றும் எண்ணெய் துறை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகளையும் அமெரிக்கத் துணை ஜனாதிபதி சந்தித்து, அணுசக்தி மற்றும் வர்த்தகத் தடைகள் நீக்கம் குறித்துப் பேசவுள்ளார்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையே இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகவிருந்தது. எனினும், லெபனானில் தரைவழியாகச் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையே திடீரென ஏற்பட்ட பாரிய மோதல்கள் காரணமாக, இப்பேச்சுவார்த்தையை ஈரான் தற்காலிகமாக இரத்து செய்திருந்தது.
தற்போது பிராந்தியச் சூழல் ஓரளவு சீரடைந்துள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் இராஜதந்திரக் குழுக்களும் பேச்சுவார்த்த மேசைக்குத் திரும்பியுள்ளன.
நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் உள்ள சிக்கல்களைக் களையும் பொருட்டு, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வமாக மத்தியஸ்தம் செய்வதற்காகப் பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் சுவிட்சர்லாந்து சென்று பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளமை சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் உற்றுநோக்கப்படுகிறது.
















