தமிழ் நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், டிவிகே மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கும் இடையே பரஸ்பர குற்றச்சாட்டுகள் பரிமாறப்படும் ஒரு தீவிர அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதற்காக ஒரு ஆலோசனை நிறுவனம் தனக்கு ரூ. 35 கோடி தருவதாகக் கூறியதாகத் தெரிவித்த டிவிகே சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், சென்னை பொலிஸார் நேற்றைய தினம் மூன்று பேரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
ஜோசப் விஜய் தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதற்காக, டிவிகே கட்சியைச் சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்களை ஒரே நேரத்தில் இராஜினாமா செய்ய வைக்கும் திட்டம் இதில் அடங்கியிருந்ததாகத் தகவல் முகமைகள் தெரிவிக்கின்றன.
டிவிகே சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜாவுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், பாலாஜியின் சகோதரர் அசோக் மீது தற்போது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘கையும் களவுமாகப் பிடிபட்ட திமுக’
சடடமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறி, திமுகவை டிவிகே கடுமையாகச் சாடியது.
கடந்த 40 நாட்களில், பல டிவிகே சட்டமன்ற உறுப்பினர்களை திமுக அணுகியதாக அக்கட்சி குற்றம் சாட்டியது.
திமுக “குதிரை பேரம்” (சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல்) போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய தமிழக அமைச்சரும் மூத்த டி.வி.கே. உறுப்பினருமான சி.டி.ஆர். நிர்மல் குமார், அக்கட்சி இப்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாகக் கூறினார்.
“எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க திமுக முயற்சிக்கிறது.
இப்போது அவர்கள் காவல்துறையிடம் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.
எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை 35 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்க அவர்கள் முயன்றனர்.
கடந்த 40 நாட்களாகவே எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க திமுக முயற்சி செய்து வருகிறது; எங்கள் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் அணுகினர்” என்று நிர்மல் குமார் கூறினார்.
ஒரு நெருக்கடியை உருவாக்க முயன்றதாக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் மீது அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
“செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டினார்.
இதற்குப் பின்னணியில் ஸ்டாலினும் உதயநிதியும் உள்ளனர்.
இதை மறைப்பதற்காக, நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் கூறி டிவிகே மீது அவர்கள் பழி சுமத்துகிறார்கள்.
நாங்கள் ஒருபோதும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதில்லை; எங்கள் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் நாங்கள் திருப்தியாகவே இருக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
திமுக, அதிமுக பதிலடி
எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை டிவிகே கட்சிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
விஜய் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், தனது தோல்விகளை மறைக்கவே டிவிகே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் திமுக குற்றம் சாட்டியது.
“விஜய் தனது வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் (டிவிகே கூட்டணி) இப்போது அரசியல் பேரங்களில் (குதிரை பேரம்) ஈடுபட்டுள்ளனர்.
இத்தகைய பயனற்ற முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது, மு.க. ஸ்டாலின் ஏன் பதவி விலக வேண்டும்?” என்று திமுக தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதாகக் கூறி, விஜய் தலைமையிலான டிவிகே கட்சியையும் அதிமுக விமர்சித்தது.
அண்மையில் அதிமுகவின் பல சட்டமன்று உறுப்பினர்கள் டிவிகே கட்சியில் இணைந்தனர்.
இதற்கு, அரசியல் பேரங்கள் மூலம் எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதும், தேர்தலுக்கு முன்பு ‘பணப் பெட்டி கூட்டணி’ என்று தாங்களே விமர்சித்த கட்சிகளை இப்போது தங்கள் ‘சோபா கூட்டணியில் சேர்த்துக்கொள்வதும் நடக்கிறது.
இவற்றிலெல்லாம் மக்களின் நலன் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டிவிகேவுக்கு கூட்டணிக் கட்சிகள் ஆதரவு
இருப்பினும், டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் திமுகவை விமர்சித்தன.
“எதிர்க்கட்சியாக அமர்வதற்கு திமுக ஏன் அஞ்சுகிறது?” என்றும், “விஜய் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க ஏன் முயற்சிக்கிறது?” என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
“எதிர்க்கட்சியாக அமர்வதற்கு திமுக ஏன் இவ்வளவு அஞ்சுகிறது? அவர்கள் எதை மறைக்க விரும்புகிறார்கள்? திமுக ஏன் பயப்படுகிறது மற்றும் மக்களின் தீர்ப்புக்கு ஏன் துரோகம் இழைக்க விரும்புகிறது? அரசாங்கத்தை அமைப்பதில் திமுக ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது?” என்று காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி எழுப்பினார்.
தேர்தலுக்குப் பிறகு திமுகவிலிருந்து விலகி டிவிகேவுடன் இணைந்த மற்றொரு கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, டிவிகே அரசாங்கத்திற்குத் தாங்கள் ஐந்து ஆண்டுகள் ஆதரவளிப்பதாகத் தெரிவித்தது.
“தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை திமுக இழுக்க முயல்வதாக டிவிகே முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து எனக்குத் தெரியாது.
கூட்டணிக் கட்சிகள் டிவிகே அரசாங்கத்தின் மீதான தங்கள் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் கூட்டணிக் கட்சிகள் டிவிகேவை ஆதரிக்கும்.
சட்டமன்ற உறுப்பினர்களை இராஜினாமாக்கள் ஆரோக்கியமான அறிகுறி அல்ல; இத்தகைய செயல்களை ஊக்குவிப்பது நல்லதல்ல,” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி கூறினார்.















