அட்லாண்டா மைதானத்தில் புதன்கிழமை (15) தொடங்கவுள்ள 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் புகழ்பெற்ற கால்பந்துப் போட்டியை மீண்டும் எதிர்கொள்ளவுள்ளன.
உலக கால்பந்தின் மிகப்பெரிய போட்டி மோதல்களில் ஒன்றின் புதிய அத்தியாயம் இந்த ஆட்டத்தில் எழுதப்படவுள்ளது.
21 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்விரு நாடுகளும் முதன்முறையாக நேருக்கு நேர் மோதுவதால், இது கடும் போட்டி நிறைந்த ஆட்டமாக அமையவுள்ளது.
லியோனல் மெஸ்ஸி, ஜூட் பெல்லிங்ஹாம் மற்றும் ஹாரி கேன் உள்ளிட்ட உலகக் கால்பந்தின் மிகச்சிறந்த நட்சத்திரங்கள் இந்த போட்டியில் களமிறங்கவுள்ளனர்.
இங்கிலாந்து கால்பந்து அணி இத்தொடரில் தோல்வியைச் சந்திக்காமல் உள்ளது.
நாக்-அவுட் சுற்றுகளில் கொங்கோ ஜனநாயகக் குடியரசு, போட்டியின் இணை-நடத்துநரான மெக்சிகோ மற்றும் நோர்வே ஆகிய அணிகளை வீழ்த்தி அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இங்கிலாந்து அணிக்காக இதுவரை அதிக கோல்களை அடித்தவரான தலைவர் ஹாரி கேன் மற்றும் முக்கிய மிட்ஃபீல்டரான ஜூட் பெல்லிங்ஹாம் ஆகியோர், 1966 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அந்த அணிக்காக தலா ஆறு கோல்கள் மற்றும் ஒரு கோல் வாய்ப்பை உருவாக்கித் தந்ததன் மூலம், கோல் பங்களிப்புப் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.
கொங்கோ குடியரசுக்கு எதிராக கேன் இரண்டு கோல்கள் அடித்து, இங்கிலாந்தின் மீள்வருகை வெற்றிக்கு உத்வேகம் அளித்தார்.
அதே நேரத்தில், பெல்லிங்ஹாம் மெக்சிகோ மற்றும் நோர்வேக்கு எதிராக அடுத்தடுத்து தலா இரண்டு கோல்கள் அடித்து, ஃபிஃபா உலகக் கிண்ண நாக்-அவுட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை தலா இரண்டு கோல்கள் அடித்த, ஜாம்பவான் டியாகோ மரடோனாவுக்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் ஆனார்.
இருப்பினும், கடும் போராட்டத்திற்குப் பின்னர் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள ஆஜென்டினா அணியை எதிர்கொள்ளும்போது, ’த்ரீ லயன்ஸ்’ (Three Lions) அணி தங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.
‘J’ பிரிவில் முதலிடம் பிடித்த பிறகு, ஆர்ஜென்டினா கால்பந்து அணி கூடுதல் நேரத்தில் கேப் வெர்டேவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து எகிப்துக்கு எதிரான ஆட்டத்தில், ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட வியத்தகு திருப்பத்தின் மூலம் அதே கணக்கில் வெற்றி பெற்றது.
காலிறுதியில் சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தவும் ஆர்ஜென்டினா அணிக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது.
ஃபிஃபா உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல் அடித்தவரான லியோனல் மெஸ்ஸி, நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டினா அணிக்காக மீண்டும் ஒருமுறை ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்துள்ளார்.
மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி எட்டு கோல்களை அடித்துள்ளார் மற்றும் இரண்டு கோல்களுக்கு உதவியுள்ளார்.
இதில், அல்ஜீரியாவுக்கு எதிரான தொடக்கக் குழு ஆட்டத்தில் அடித்த ஹெட்ரிக் கோல்களும் அடங்கும்.
சர்வதேச கால்பந்தாட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற கண்டங்களுக்கிடையேயான போட்டிகளில் ஒன்றாக ஆர்ஜென்டினாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இந்தப் போட்டி திகழ்கின்றது.
இவ்விரு அணிகளும் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில், ஆர்ஜென்டினா மூன்று வெற்றிகளையும், இங்கிலாந்து ஆறு வெற்றிகளையும் பெற்று ஒட்டுமொத்தமாக முன்னிலை வகிக்கிறது.
அதே சமயம், ஐந்து போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன.
ஃபிஃபா உலகக் கிண்ணத்தில், ஆர்ஜென்டினாவுக்கு எதிரான ஐந்து போட்டிகளில் மூன்றில் இங்கிலாந்து வெற்றி பெற்றது; 1962, 1966 மற்றும் 2002-ல் வென்றது.
ஆர்ஜென்டினாவின் ஒரேயொரு முழு நேர வெற்றி 1986-ஆம் ஆண்டு காலிறுதிப் போட்டியில் கிடைத்தது.
அப்போது, டியாகோ மரடோனா இரண்டு கோல்களை அடித்து ‘லா அல்பிசெலெஸ்டே’ (La Albiceleste) அணிக்கு உத்வேகம் அளித்தார்.
அந்த 2-1 வெற்றியில், அவரது புகழ்பெற்ற ‘Hand of God’ மற்றும் நூற்றாண்டின் கோல் ஆகியவை அடங்கும்.
அவர்களின் மற்றொரு உலகக் கிண்ண மோதல் 1998-ஆம் ஆண்டு 16-வது சுற்றில் 2-2 என்ற சமநிலையில் முடிந்தது.
பின்னர் ஆர்ஜென்டினா பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அந்தப் போட்டி, பரபரப்பான ஷூட்-அவுட்டைப் போலவே டேவிட் பெக்காமின் சிவப்பு அட்டைக்காகவும் நினைவுகூரப்படுகிறது.
இருப்பினும், 2002 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் ஆர்ஜென்டினாவுக்கு எதிரான குழுச் சுற்று ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பின் மூலம் வெற்றி கோலை அடித்து, பெக்காம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முந்தைய தவறுக்கான பரிகாரத்தைத் தேடிக்கொண்டார்.
மேலும், இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மிக அண்மைய போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
2005-இல் நடைபெற்ற சர்வதேச நட்பு ரீதியிலான அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

















