தேசியப் பூங்காக்களில் சுற்றுலா ஈர்ப்பை அதிகரித்தல், உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் சுற்றாடல் பிரதி அமைச்சரின் தலைமையில் மின்னேரியா, கௌடுல்லா மற்றும் ஹுருலு தேசியப் பூங்காக்களில் சிறப்பு கண்காணிப்புப் பயணமொன்று மேற்கொள்ளப்பட்டது.
தினமும் பூங்காக்களுக்குள் நுழையும் அதிக எண்ணிக்கையிலான ஜீப்புகளால் வனவிலங்குகள் மற்றும் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, நிபுணர் குழுவின் மூலம் அறிவியல் ரீதியான ஆய்வை அவசரமாக நடத்துவதற்கும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சிகிரியா – பெக்குளம் பகுதியில் மின்னேரியா பூங்காவிற்கு புதிய நுழைவாயில அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மின்னேரியா தேசியப் பூங்காவிற்குள் நுழையும் வாகனங்களை பத்து ஓயா வெளியேறும் வழி வழியாகத் திருப்பிவிடவும், மின்னேரியா மற்றும் கௌடுல்லா பூங்காக்களுக்கு ஒரே பயணச்சீட்டு (Single Ticket) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், ஹுருலு சூழல் பூங்காவிற்கு புதிய இணையவழி பயணச்சீட்டு முறை மற்றும் உயர்தர உணவக வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதுடன், வாகனக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் புதுப்பிக்கப்படவுள்ளன.
பூங்காக்களின் அருங்காட்சியகங்களை நவீனப்படுத்துவதுடன், வனவிலங்குகள் தொடர்பான டி-ஷர்ட்கள் மற்றும் நினைவுப் பொருட்களை விற்பனை செய்து திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் புதிய திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
இத்தீர்மானங்கள் அரச நிறுவனங்கள் மற்றும் சூழலியல் வல்லுநர்களுடன் இணைந்து விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.















