கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) பயிற்சி முகாம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் ஆகியவை இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறி இலங்கை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
பளைப் பகுதியில் வன நிலத்தை அழித்து மூன்று மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளதாகவும், அது விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாகவும் குண்டு தயாரிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து அது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டது.
காணொளியில் காட்டப்பட்டுள்ள இடம், கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு, முக்கம்பன் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சிப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ஆகியவற்றால் விசாரணைகள் தொடங்கப்பட்டன.
விசாரணை முடிவுகளின்படி, அந்த இடத்தில் வெடிபொருட்கள், சட்டவிரோதப் பொருட்கள் அல்லது குண்டுகள் தயாரிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத அல்லது தீவிரவாத அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடந்ததற்கோ, அல்லது அந்த இடம் பயங்கரவாதச் செயல்களுக்கான போர்முறைப் பயிற்சி மையமாகச் செயல்பட்டதற்கோ எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், அந்த இடத்தில் சட்டவிரோதமாகக் காடுகளை அழித்தது மற்றும் சட்டவிரோதமாகச் சொத்துகளைக் கையகப்படுத்தியது தொடர்பான தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன.
இது குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரப்பியதாகக் கூறப்படும் நபர் ஒருவர், ஆகஸ்ட் 18 அன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
வீடியோ மற்றும் ஊடகச் சந்திப்பு மூலம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும், பொரலெஸ்கமுவ – பெல்லன்வில பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
இவர் நேற்று (19) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, செப்டம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ஆகியவற்றால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.













