அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் காவலில் இருந்த நபர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் தந்தை காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக விசேட விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காலி பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், காலி மாவட்டம் (II) பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்துக்குள் ஒருவர் ஆவேசமாக நடந்து கொண்டு, தனது தந்தை பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறும் காணொளி வெளியாகியதைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் மகன் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி இரவு அவரது தந்தை வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் பொலிஸாரால் நிறுத்தப்பட்டு தேசிய அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரப்பட்டுள்ளார்.
அடையாள அட்டையை அருகிலுள்ள வீட்டிலிருந்து எடுத்து வரத் தயாராக இருந்தபோதிலும், பொலிஸாரால் அவதூறாகப் பேசப்பட்டதுடன் தாக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தனது தந்தை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னரும் தாக்கப்பட்டதாகவும், துப்பாக்கியால் மிரட்டப்பட்டதாகவும், உடனடி மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தந்தை வீடு திரும்பாததால் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, அவர் இரத்தம் சிந்திய நிலையில் இருந்ததாகவும் மகன் கூறியுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக பொலிஸார் வேறுபட்ட விளக்கமொன்றை வழங்கியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர் மதுபோதையில் வீதியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறி கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யும் போது தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்ததால் காணொளியில் காணப்படும் காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஆகஸ்ட் 25 ஆம் திகதி பலாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், நீதிமன்ற வைத்திய அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
பின்னர் பலாப்பிட்டிய மேலதிக நீதவான் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தனியான விசாரணையொன்றை பொலிஸ் மா அதிபர் (IGP) உத்தரவிட்டுள்ளதாகவும், காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், எல்பிட்டிய பிரிவுக்கு வெளியேயுள்ள மூத்த அதிகாரி ஒருவரின் தலைமையில் அந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயங்களுக்கு காரணமான சூழ்நிலைகள் மற்றும் குடும்பத்தினரும் பொலிஸாரும் வழங்கியுள்ள முரண்பட்ட விளக்கங்கள் தொடர்பான உண்மைகள் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் மூலம் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.













