உக்ரைன் நாட்டின் சுத்திகரிப்பு ஆலைகள் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உக்ரைனிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் (Petrol Pumps) இலக்குவைத்து ரஷ்யப் படைகள் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
வடகிழக்கு உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வில் (Kharkiv) திங்கட்கிழமை இரு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது ரஷ்ய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இதேபோல கிரிவி ரிஹ் (Kryvyi Rih) நகருக்கு வெளியே அமைந்திருந்த எரிபொருள் நிலையத்தின் மீது கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்லைப்புறப் பகுதிகளில் எரிபொருள் நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா முன்னெடுத்து வரும் இந்தத் தாக்குதல்கள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவில் கடுமையாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
உக்ரைனில் இதுவரை குறைந்தது 246 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக ‘நஃப்டோ ரினோக்’ (Nafto Rynok) ஆற்றல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 114 தாக்குதல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு, “எரிபொருள் நிரப்பியவுடன் உடனடியாக அப்பகுதியை விட்டு அகலுங்கள்” என கார்கிவ் நகர மேயர் இஹோர் தெரெகோவ் ஓட்டுநர்களை எச்சரித்துள்ளார்.
மேலும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை (Air Raid Alerts) விடுக்கப்படும் போது வாகன ஓட்டிகள் உடனடியாக எரிபொருள் நிலையங்களை விட்டு வெளியேறுமாறும், தேவைப்பட்டால் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பொலிஸார் விசேட வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளனர்.













