விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனியவில் ‘ஐஸ்’ போதைப்பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய புதைக்கப்பட்ட கொள்கலனைக் கண்டுபிடித்த வழக்கில் குறித்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் உற்பத்தியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு காணியில் இருந்து இரண்டு தங்க நிற மெகசின்கள், ஒரு 9 மி.மீ பிஸ்டல், ஒரு கைக்குண்டு மற்றும் 115, T-56 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்கள் சம்பத் மனம்பேரி என்பவருக்கு சொந்தமானவை என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














