மட்டக்களப்பு கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற இரு வீதி விபத்தில் 15 வயது சிறுவன் ஒருவரும் 19 வயது இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனையில் இருந்து சந்திவெளி நோக்கி பயணித்த கனரக வாகனத்துடன் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது விபத்தில், கிரான் பிரதான வீதியை சேர்ந்த 19 வயதுடைய சுரேந்திரன் கிறசன் என்ற இளைஞன் உயிரிழந்ததுடன் கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடித்தோணா பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 16 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் சம்பவ தினமான நேற்று மாலை 5.00 மணியளவில் அதிவேகமாக சென்ற நிலையில் வேக கட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய ஜெயசீலன் ஜெதுசன் என்ற சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் 14, மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பாக அந்தந்த பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














