ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில், திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளயார் தோட்டத்திற்கு அருகில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இன்று முற்பகல் 9.00 மணியளவில் சென்கிளயார் பகுதியிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வேன் கண்டி பகுதியில் இருந்து புதிதாக கொள்வனவு செய்து கொண்டு வரப்பட்ட ஒன்று என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற போது வாகனத்தை தந்தை செலுத்தியுள்ளதுடன், அதில் அவரது மூன்று பிள்ளைகளும் இருந்துள்ளனர்.
விபத்தில் வாகனத்தில் இருந்த ஒரு சிறுவன் காயமடைந்துள்ளதோடு, பிரதேச மக்களின் உதவியுடன் உடனடியாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏனையோருக்கு பாரிய காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர் .
வாகனம் பயணித்துக் கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














