பாகிஸ்தான் காபூல் மற்றும் காந்தஹார் மீது குண்டுவீச்சு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளனர்.
பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை (27) ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் தாலிபான் தலைவர்கள் வசிக்கும் காந்தஹார் நகரம் மற்றும் பிற நகரங்களைத் தாக்கியது.
எல்லையில் தலிபான்களுடன் மோதலையும் தொடர்ந்தது.
இந் தாக்குதல்களில் இரு தரப்பினரும் பெரும் இழப்புகளைச் சந்தித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தலிபான் தலைவர்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார்.
அத்துடன், ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் எப்போதும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சித்துள்ளது.
இப்போது நாங்கள் இந்த விடயத்தையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம் என்றும் அவர் கூறினார்.
கடந்த வார இறுதியில் ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் வியாழக்கிழமை எல்லையில் ஆப்கானிஸ்தான் பதிலடித் தாக்குதல்களைத் தூண்டியதைத் தொடர்ந்து அண்மைய வன்முறை வெடித்தது.
பாகிஸ்தான் தலிபான் போராளிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் கூறியதால் நீண்ட காலமாக கொதித்து வரும் பதட்டங்கள் அதிகரித்தன.
எனினும், ஆப்கானிஸ்தான் இதை மறுக்கிறது.














