பிரித்தானியாவின் வான்பரப்பில் சஹாரா பாலைவனப் புழுதி படரவுள்ளதால், இந்த வார இறுதியில் கண்கவர் சூரிய அஸ்தமனங்களையும், ‘இரத்த மழை’ (Blood Rain) எனப்படும் அபூர்வ நிகழ்வையும் மக்கள் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து கிளம்பிய நுண்மணல் மற்றும் தாதுப் பொருட்கள் அடங்கிய ஒரு பாரிய புழுதிப் படலம், வெப்பமான தெற்கு காற்று நீரோட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து பிரித்தானியாவை வந்தடையவுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் நிலவிய ‘ரெஜினா’ (Regina) புயல் காரணமாக இந்தப் புழுதி வளிமண்டலத்தின் மேல் அடுக்குக்குத் தள்ளப்பட்டு, தற்போது பிரித்தானியாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன்போது வளிமண்டலத்தில் தங்கியிருக்கும் இந்த நுண் துகள்கள் சூரிய ஒளியைச் சிதறடிப்பதன் மூலம், வானத்தை அடர் தங்கம், அம்பர் மற்றும் செம்மஞ்சள் நிறங்களில் மாற்றும்.
குறிப்பாக நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது வானம் மிகவும் அழகாகவும், ஒரு மாயாஜாலத் தோற்றத்துடனும் காட்சியளிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் இந்தத் தாக்கம் அதிகமாக இருக்கும்.
வளிமண்டலத்தில் உள்ள இந்தப் புழுதித் துகள்கள் மழையுடன் சேரும்போது, அவை நிலத்திற்கு வரும்போது சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் விழும்.
இதுவே ‘இரத்த மழை’ என அழைக்கப்படுகிறது. இந்த மழை பெய்து ஓய்ந்த பின்னர் , கார்கள், ஜன்னல்கள் மற்றும் தோட்டத் தளபாடங்கள் மீது ஒரு மெல்லிய செந்நிறப் படிவம் படிந்திருப்பதைக் காணலாம்.
‘இரத்த மழை’ என்ற பெயர் அச்சமடைய செய்வதாக இருந்தாலும், இது முற்றிலும் இயற்கையானது மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது.
இது ஒரு ஒப்பனை ரீதியான (Cosmetic) பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்.
இந்த வார இறுதியில் நிலவவுள்ள வசந்தகால வெப்பநிலையுடன் இணைந்து இந்தப் புழுதிப் படலம் வருவதால், பிரித்தானியா முழுவதும் ஒரு மிதமான சூழல் நிலவும்.
சஹாரா புழுதி பிரித்தானியாவிற்கு வருவது இது முதல் முறையல்ல ஒவ்வொரு ஆண்டும் சில முறை இத்தகைய நிகழ்வுகள் நடப்பது வழக்கமானது என்பதுடன் இது உலகளாவிய வானிலை அமைப்புகள் எவ்வளவு தூரம் பிணைக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஒரு நினைவூட்டலாக அமைகிறது.













