வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
தமது கட்சி ஏகமனதாக எடுத்த தீர்மானத்திற்கு அமைய இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக SJb யின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவினால் அமைச்சருக்கு எதிராக ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை மற்றும் நிலக்கரி கொள்வனவு செயல்முறையை சரியாக நிர்வகிக்கத் தவறியமை ஆகிய இரண்டு காரணிகளின் அடிப்படையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”
“ஐக்கிய மக்கள் சக்தியுடன் எதிர்க்கட்சியில் செயற்படும் ஏனைய குழுக்களுடனும் கலந்துரையாடி, பரந்தளவிலான ஆதரவைப் பெற்றுக்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.”
“அதேபோல், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு தமது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் எமக்கு ஆதரவு வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.













