பிரித்தானியாவின் பல பகுதிகளில் கடும் சூறாவளி காற்றுடன் கூடிய காலநிலை நிலவவுள்ளதுடன், மீண்டும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று, ஸ்காட்லாந்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மணிக்கு 130 கி.மீ (80mph) வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ‘மஞ்சள் நிற’ எச்சரிக்கை (Yellow Warning) விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் காற்றினால் விமான சேவைகள், படகுப் போக்குவரத்து (Ferry) மற்றும் பாலங்களில் கனரக வாகனப் போக்குவரத்திற்குத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக இன்னர் ஹெப்ரைட்ஸ் (Inner Hebrides) மற்றும் ஆர்க்னி (Orkney) பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
நாளை முதல் பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 97 கி.மீ (60mph) வேகத்திலும், ஏனைய பகுதிகளில் மணிக்கு 65-80 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
வெள்ளிக்கிழமை முதல் வானிலையில் அதிரடி மாற்றம் ஏற்படவுள்ளது.
ஆர்டிக் பிராந்தியத்திலிருந்து வீசும் வடமேற்குக் காற்றினால் நாட்டின் வெப்பநிலை சராசரியை விட 3 முதல் 4 பாகை வரை குறையக்கூடும்.
இதனால் கடும் குளிர் நிலவுவதுடன், மலையகப் பகுதிகளில் பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து மற்றும் வட இங்கிலாந்து பகுதிகளில் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு நிலவும்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய இந்தக் குளிர் காலநிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கலாம் என்பதால் பொதுமக்கள் பயணங்களின் போது அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.











