மத்திய கிழக்கில் போர் 12-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று உக்கிரமான வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று இடம்பெற்ற மிகக் கடுமையான குண்டுவீச்சுகளைத் தொடர்ந்து, இன்று இஸ்ரேல், லெபனான் மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் உள்ள இலக்குகள் மீது இரு தரப்பினரும் மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
ஈரான் ஏவிய ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணை எதிர்ப்பு கவசங்களின் வெடிப்புச் சத்தங்கள் அதிகாலை வேளையில் இஸ்ரேல் முழுவதும் எதிரொலித்தன.
இதனால் மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள் இரவு முழுவதும் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை (1/5) கொண்டு செல்லும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து இந்தப் போரினால் முடக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை அருகே கண்ணிவெடி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 16 ஈரானியக் கப்பல்களை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அழித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், வளைகுடா பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியை முற்றாகத் தடுப்போம் என ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகித் தீப்பற்றியுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகக் கடற்கரைக்கு அப்பால் சென்றுகொண்டிருந்த மற்றுமொரு கொள்கலன் கப்பலும் சேதமடைந்துள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
எண்ணெய் விலை திங்கட்கிழமை உச்சத்தை எட்டியிருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையில் உலகளாவிய சந்தைகள் சற்று மீண்டுள்ளன.
கச்சா எண்ணெய் விலையை நிலைப்படுத்த, சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான எண்ணெய் இருப்பை சந்தைக்கு வெளியிட முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.











