மிலனோ கோர்டினா (Milano Cortina) 2026 குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் உருகும் பனி நிலவரம் காரணமாக, போட்டிகளை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
இத்தாலியின் மிலனோ கோர்டினாவில் நடைபெற்று வரும் 2026 பாராலிம்பிக் போட்டிகளில், பருவகாலத்திற்கு மாறான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.
இதனால் பனிப்பாறைகள் உருகி ‘சேறு’ போன்ற (Slushy) நிலைக்கு மாறியுள்ளன.
இவ்வாறான ஒட்டும் தன்மையுள்ள பனியில் ஸ்கீயிங் (Skiing) மற்றும் ஸ்னோபோர்டிங் (Snowboarding) செய்வது தங்களுக்குப் பெரும் சவாலாகவும், உயிருக்கே ஆபத்தானதாகவும் இருப்பதாகப் பங்கேற்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கர்ட் ஓட்வே (Kurt Oatway) இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் போட்டிகள் ஒரு மாதத்திற்கு முன்னரே நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான மென்மையான, உருகிய பனியிலேயே நாங்கள் போட்டியிட வேண்டியுள்ளது. இது உண்மையான பனிச்சறுக்கு பந்தயமே கிடையாது” எனத் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பல வீரர்கள் வெப்பம் தாளாமல் மூச்சுவிட சிரமப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புவி வெப்பமடைதல் காரணமாக கடந்த சில குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இவ்வாறான சிக்கல்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன.
இதன் விளைவாக, எதிர்காலப் போட்டிகளை ஒரு மாதத்திற்கு முன்னரே (பிப்ரவரி மாதத்தில்) நடத்துவது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
போட்டிகளை முன்கூட்டியே நடத்துவது வீரர்களுக்குச் சாதகமான பனிச் சூழலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பாராலிம்பிக் வீரர்களுக்கான முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் அதிகரிக்க உதவும் என விளையாட்டு ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
மார்ச் மாதத்தின் மிதமான காலநிலை போட்டிகளுக்கு “கொடூரமான” மற்றும் “கடுமையான” சூழலை உருவாக்குவதால், கால அட்டவணையில் மாற்றம் செய்வது அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.














