மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அடுத்த மாதம் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் (Grand Prix) கார் பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 12 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள் ரத்து செய்யப்படுவதாக சர்வதேச கார் பந்தய கூட்டமைப்பு (FIA) அறிவித்துள்ளது.
“எமது சமூகம் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கே நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிப்போம்” என கார் பந்தய கூட்டமைப்பு தலைவர் முகமது பின் சுலாயம் தெரிவித்துள்ளார்.
இந்த ரத்து நடவடிக்கையினால், மார்ச் 29-ஆம் திகதி ஜப்பானில் நடைபெறும் மூன்றாவது சுற்றுக்கும், மே 3-ஆம் திகதி மியாமியில் (Miami) நடைபெறும் போட்டிக்கும் இடையே ஐந்து வார கால இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த 24 போட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக குறைய வாய்ப்புள்ளது.
இருப்பினும், ஆண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்த முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான F1 பந்தயங்கள் மட்டுமல்லாது, அதே காலப்பகுதியில் நடைபெறவிருந்த FIA பார்முலா 2, பார்முலா 3 மற்றும் F1 அகாடமி போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கத்தாரில் நவம்பர் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த மற்றும் அபுதாபியில் டிசம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருக்கும் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியம் விரைவில் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் திரும்ப வேண்டும் என கார் பந்தய கூட்டமைப்பு தலைவர் தனது அறிக்கையில் விருப்பம் வெளியிட்டுள்ளார்.
















