மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் பெண்கள் தலைமைத் தாங்கும் ஐம்பது குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் மனிதநேய நிகழ்வு நேற்று நடைபெற்றது.
திக்கோடை வட்டார பிரதேச சபை உறுப்பினர் அருள்ராசா பிறேமாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிராமத்தில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் பல குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தற்போதைய வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பொருளாதார சவால்கள் காரணமாக சிரமங்களை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு இவ்வுதவி ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளது.
இந்நிவாரணப் பொருட்கள், பிரித்தானியாவில் தொழில்புரியும் சமூக செயற்பாட்டாளர்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
தாயக மக்களின் துயரங்களை உணர்ந்து, குறிப்பாக பெண்கள் தலைமையிலான வறிய குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த உதவி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தாயக மக்களின் நலனில் அக்கறை கொண்டு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் தமிழர்களின் இத்தகைய பங்களிப்புகள் சமூகத்தில் பெரிதும் பாராட்டப்படுகின்றன.
இந்நிகழ்வின் மூலம் பயனடைந்த குடும்பங்களும், கிராம மக்களும் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.












