இங்கிலாந்தில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நூற்றுக்கணக்கான வனவிலங்குகளை அழிவிலிருந்து பாதுகாக்க, அமைச்சர்கள் 90 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளனர்.
உயிரினப் பாதுகாப்பில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முதலீடு இதுவென்று இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிதியுதவியானது இங்கிலாந்து முழுவதும் பறவைகள், நீர்நாய்கள், வண்டுகள், நத்தைகள், சிலந்திகள் மற்றும் கடற்குதிரைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அழிவிலிருந்து பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்.
ஐக்கிய இராச்சியம் உலகின் மிகவும் இயற்கை வளம் குன்றிய நாடுகளில் ஒன்றாகும்.
அங்கு 1970 ஆம் ஆண்டிலிருந்து வனவிலங்குகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாகவும், ஆறு உயிரினங்களில் ஒன்று அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
2030 ஆம் ஆண்டுக்குள் 30% நிலத்தையும் கடலையும் இயற்கைக்காகப் பாதுகாக்க வேண்டும் என்ற சட்டப்பூர்வமான இலக்கை அடைவதில், ஐக்கிய இராச்சியம் கணிசமாகப் பின்தங்கியுள்ளது என்று கடந்த ஆண்டு பசுமைக் குழுக்கள் மதிப்பீடு செய்துள்ளன.
இந்த நிலையில், இயற்கைச் சீரழிவுகளைத் தடுப்பதற்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்கும் இங்கிலாந்து அரசாங்கத்தின் நோக்கத்திற்கு இந்த நிதி உயர்வு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














