முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் சோனல் தினுஷா தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தபோதிலும், இந்தியாவின் 462 ஓட்டங்களுக்குப் பதிலடியாக இலங்கையால் முதல் இன்னிங்ஸில் 284 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால், காலியில் நடைபெற்ற இப்போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 178 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையைப் பெற்றது.
தினுஷவும் விக்கெட் நிரோஷன் டிக்வெல்லவும் ஆறாவது விக்கெட்டுக்கு 146 ஓட்டங்களை சேர்த்து இந்தியப் பந்துவீச்சாளர்களைத் திறம்பட எதிர்கொண்டனர்.
இருப்பினும், 62 ஆவது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 80 ஓட்டங்கள் எடுத்திருந்த டிக்வெல்லவை ஆட்டமிழக்கச் செய்தார்.
இந்த ஆட்டமிழப்பு, டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்காமலே அதிக முறை 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற தேவையற்ற சாதனையை டிக்வெல்லவை நீட்டிக்கச் செய்தது.
33 வயதான இவர் இதுவரை 23 டெஸ்ட் அரைசதங்களை அடித்துள்ள போதிலும், இன்னும் ஒருமுறை கூட சதத்தை எட்டவில்லை.
அவர் சதம் அடிப்பதற்கு மிக அருகில் வந்த தருணம் 2021 இல் இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அமைந்தது.
அப்போது ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 96 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
சதம் ஏதுமின்றி அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் டிக்வெல்ல தற்போது முதலிடத்தில் உள்ளார்.
சதம் அடிக்காமலே 16 அரைசதங்கள் அடித்த இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேத்தன் சௌஹான் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இந்த இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா 67-வது ஓவரில் கேஷார நுவான்தவை ஆட்டமிழக்கச் செய்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 350 விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்தார்.
அனில் கும்ப்ளே (619), ரவிச்சந்திரன் அஸ்வின் (537), கபில் தேவ் (434) மற்றும் ஹர்பஜன் சிங் (417) ஆகியோருக்குப் பின்னர், இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்தியப் பந்துவீச்சாளர் இவராவார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில், இலங்கை வீரர் ரங்கனா ஹெரத் (433) மற்றும் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி (362) ஆகியோருக்கு அடுத்தபடியாக, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஜடேஜா இப்போது மூன்றாமிடத்தில் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000-க்கும் மேற்பட்ட ஓட்டங்களையும் 350 விக்கெட்டுகளையும் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில், முன்னாள் இந்திய அணித் தலைவர் கபில் தேவுடன் ஜடேஜாவும் இணைந்ததன் மூலம் இந்த மைல்கல் எட்டப்பட்டது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக, 89 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா 4,095 ஓட்டங்களையும் 348 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார்.
மொத்தத்தில், கபில் தேவ், இங்கிலாந்தின் இயன் போத்தம் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோருடன் இணைந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000-க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை எட்டிய நான்காவது வீரராக ஜடேஜா திகழ்கிறார்.
அதன்பின், 78 ஆவது ஓவரில் ஒரு ஓட்டம் எடுத்ததன் மூலம் தினுஷ தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அடுத்த பந்திலேயே மானவ் சுதார் பிரபாத் ஜெயசூரியாவை ஆட்டமிழக்கச் செய்தார்.
அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஜடேஜா தினுஷவை ஆட்டமிழக்கச் செய்தார்; மானவ் சுதாரின் அடுத்த ஓவரில் லஹிரு குமார இரண்டு பவுண்டரிகளை அடித்தாலும், இறுதியில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
மானவ் சுதார் நான்கு விக்கெட்டுகளையும், ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இறுதியாக இலங்கை அணி 79.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ஓட்டங்களை எடுத்தது.
அத்துடன், 3 ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், போட்டியை நடத்தும் இலங்கை அணி ‘ஃபாலோ-வன்’ (follow-on) தவிர்க்கும் நிலையை வெற்றிகரமாக எட்டியது.
4 ஆவது நாளில் இந்திய அணி 178 ஓட்ட முன்னிலையுடன் இன்று துடுப்பாடம் செய்ய களமிறங்கும்.












