மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தயாராகி வரும் அதேவேளை, இஸ்ரேல் லெபனான் மீது கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,150-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பொதுமக்களுக்குச் சிகிச்சையளிக்க அந்நாட்டு சுகாதாரக் கட்டமைப்பு முயற்சித்து வரும் நிலையில், பெய்ரூட் பகுதியில் உள்ள இரண்டு முக்கிய மருத்துவமனைகளை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறு உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராகி வருகின்றன.
இதேவேளை, “இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இராஜதந்திர உறவுகளைச் சிதைப்பதற்கும், போர் நிறுத்தத்தை மீறுவதற்கும் அமெரிக்கா தொடர்ந்து அனுமதி அளித்தால், அது அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் எனவும் வாஷிங்டன் எடுக்கும் அந்த முடிவு முட்டாள்தனமானது, எனினும் எதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம்” எனவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ள போதிலும், இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் “போர் நிறுத்தப்படாது” எனத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த முரண்பாடான கருத்துக்கள் பிராந்தியத்தில் போர் நிறுத்தம் ஏற்படுவதில் உள்ள சிக்கலை வெளிப்படுத்துகின்றன.
தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக லெபனான் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.













