லண்டனில் உள்ள ஈரான் சர்வதேச ஊடக நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல் தொடர்பாக மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வடமேற்கு லண்டனின் வெம்ப்ளி (Wembley) பகுதியில் அமைந்துள்ள ‘வோலண்ட் மீடியா’ (Volant Media) நிறுவனத்தின் வளாகத்திற்குள், கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் எரியும் கொள்கலன் ஒன்று வீசப்பட்டது.
இந்த நிறுவனம் பாரசீக மொழிச் செய்திச் சேனலான ‘ஈரான் இன்டர்நேஷனல்’ (Iran International) இன் தாய் நிறுவனமாகும்.
அந்த எரியும் கொள்கலன் வாகன தரிப்பிடப் பகுதியில் விழுந்து அணைந்ததால், எவருக்கும் காயங்களோ அல்லது பெரும் சேதங்களோ ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் கறுப்பு நிற எஸ்.யு.வி (SUV) ரக வாகனத்தில் தப்பிச் சென்றதை அறிந்த பொலிஸார், உடனடியாகத் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
பொலிஸின் ஆயுதம் தாங்கிய அதிரடிப் படையினர் (ARV) அந்த வாகனத்தைக் கண்டறிந்து துரத்திச் சென்றனர்.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் என்.12 (N12) பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து வாகனத்தில் இருந்த மூவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது ‘உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கில் தீவைப்புச் செய்தல்’ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது:
இதேவேளை, சம்பவம் தொடர்பில் 16 முதல் 21 வரையான வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
லண்டனில் உள்ள பாரசீக ஊடக நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய அச்சுறுத்தல்கள் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















