பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் இணைந்து, ஹார்முஸ் நீரிணை பாதுகாப்புக்காக பல நாடுகளை ஒருங்கிணைக்கும் ஒரு பெரிய கடல்சார் பாதுகாப்பு திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த முயற்சியில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முக்கியமான பேச்சுவார்த்தை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள எலிசே மாளிகையில் (Élysée Palace)இல் நடைபெற்றது. இதனை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்( Emmanuel Macron) மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) இணைந்து நடத்தினர்.
சுமார் 30 முதல் 40 நாடுகள் நேரடியாகவும், காணொளி வாயிலாகவும் இதில் பங்கேற்றன.. ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம். இந்த நடவடிக்கை முழுமையாக பாதுகாப்பு நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே , ஐரோப்பிய தலைவர்கள், இந்த நீரிணை மூடப்பட்டிருப்பது உலக பொருளாதாரத்தில் பணவீக்கம், உணவு பற்றாக்குறை மற்றும் விமான சேவை தடைகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.
அத்துடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), “இந்த நீரிணையை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திறப்பது உலகளாவிய பொறுப்பு” என கூறியுள்ளார். மேலும், ஈரான் உலக பொருளாதாரத்தை பாதிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.














