சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
சிகிச்சையின் பின்னர் அவர் தற்போது வெலிசர கடற்படை தளத்திலுள்ள சிறைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு கைதிக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிள்ளையானுக்கு ஏதேனும் விசேட தேவைகள் ஏற்படும் பட்சத்தில், அதனை அவர் முறையாகச் சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு அறிவிக்க வேண்டும் எனவும், அத்தகைய கோரிக்கைகள் சட்டரீதியாகப் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் சுப்ரமணியம் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் கீழேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.














