ஹைதராபாத்தில் நேற்றிரவு (21) நடந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்தாடியது.
அபிஷேக் சர்மா அபாரமாக சதம் அடித்து, 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஒரு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
அவர் சன்ரைசர்ஸ் அணியை ஒரு பெரிய ஓட்ட இலக்கினை நிர்ணயிக்க வழிநடத்தினார்.
இதனால், இரண்டாவது இன்னிங்ஸில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
ஹைதராபாத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, டிராவிஸ் ஹெட் பவர்பிளேயில் நம்பிக்கையுடன் துடுப்பாட்டம் செய்ததால் சிறப்பான தொடக்கம் கிடைத்தது.
மேலும் அபிஷேக் சர்மா அதிக பவுண்டரிகளை அடித்து முன்னிலை வகித்தார்.
அவர்களின் அதிரடி ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தது.
டிராவிஸ் ஹெட் 26 பந்துகளில் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னரரும், அபிஷேக் தொடர்ந்து நேர்மறையாக விளையாடி ஓட்டங்களை முன்னோக்கி எடுத்துச் சென்றார்.
அவர் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய இஷான் கிஷனுடன் ஒரு விரைவான இணைப்பாட்டத்தை உருவாக்கினார்.
இஷான் கிஷனும் நேற்றைய போட்டியில் 25 ஓட்டங்கள் என்ற சிறப்பான கேமியோ மூலம் சிறப்பாக விளையாடினார்.
துரதிர்ஷ்டவசமான இஷானின் விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென், ஆட்டத்தின் வேகத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தட்டையான ஹைதராபாத் ஆடுகளத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குக் கடுமையான சவாலை அளித்தார்.
கிளாசெனைத் தவிர, அபிஷேக் சர்மாவுக்கும் இது மிகவும் சாதகமாக அமைந்தது, ஏனெனில் அவர் பொதுவாக இதுபோன்ற உயிரற்ற ஆடுகளங்களில் விளையாடி பெரிய ஓட்டங்களை குவிக்க விரும்புவார்.
இறுதியில், அபிஷேக் சர்மாவின் ஆட்டமிழக்காத 135 ஓட்டங்களுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 242 என்ற பிரம்மாண்டமான ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது.

அபிஷேக் சர்மா 68 பந்துகளில் 10 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கலாக இந்த ஓட்டங்களை குவித்தார்.
அதேநேரம், கிளாசென் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கடினமான இலக்கினை நோக்கி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி துடுப்பாட்டம் செய்ய வந்தபோது, மூன்றாவது ஓவரில் பத்தும் நிஸ்ஸங்காவை இழந்ததால் ஆரம்பத்தில் தடுமாறியது.
எனினும், நிதிஷ் ராணாவின் வருகை அவர்களின் உத்வேகத்தை அதிகரித்தது.
அவர் கே.எல். ராகுலுடன் நம்பிக்கையுடன் விளையாடி, இலக்கை விரட்டிச் சென்றார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிர் அழுத்தம் கொடுப்பதற்காக இந்த ஜோடி ஒரு வலுவான இணைப்பாட்டத்தை அமைத்தது.
ஆனால் இறுதியில் சகிப் ஹுசைன் தனது சிறப்பான பந்துவீச்சால் கே.எல். ராகுலை ஆட்டமிழக்கச் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, நிதிஷ் ராணாவும் 57 ஓட்டங்களுக்கு தனது விக்கெட்டை இழந்ததால், இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஒரு பெரிய சாதகம் கிடைத்தது.
பின்னர் சமீர் ரிஸ்வி ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டத்தை உயர்த்தினார்.
இருப்பினும், நடுத்தர வீரர்களின் துடுப்பாட்டம் அவருக்குப் பெரிய ஆதரவை அளிக்கவில்லை.
சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டிருக்க, இறுதிவரை போராடிய ஒரே துடுப்பாட்ட வீரர் அவர்தான்.
இதன் விளைவாக, இறுதி ஓவரில் சமீரும் தனது விக்கெட்டை இழந்தார், இது கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவர்களை 195 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி, 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது.
பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை நட்சத்திரம் ஈஷான் மலிங்க நான்கு ஓவர்கள் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 32 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த இளம் இந்திய துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.














