டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த சுவிஸ் ஏர் விமானம், ஓடுபாதையில் வேகமெடுத்தபோது அதன் என்ஜினில் தீப்பிடித்துள்ளது.
நேற்று (25.04) அதிகாலை 1.08 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானத்தின் ஒரு என்ஜின் திடீரென செயலிழந்ததுடன் தீப்பற்றியுள்ளது.
இதனை உடனடியாகக் கவனித்த விமானிகள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு விமானத்தை ஓடுதளத்திலேயே நிறுத்தியுள்ளனர்.
இதேவேளை, விமானத்தில் இருந்த 228 பயணிகள் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த வெளியேற்ற நடவடிக்கையின் போது ஆறு பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சுவிஸ் ஏர் நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் தங்குவதற்கும் மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், என்ஜினில் தீ ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய தொழில்நுட்ப வல்லுநர்கள் டெல்லிக்கு விரைந்துள்ள நிலையில், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


















