நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த அளவிலான பகுதியளவு சேதமடைந்த வீடுகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்த அனர்த்த நிலைமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் அதிகளவான வீடுகள் களுத்துறை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த வீடுகளின் எண்ணிக்கை 78 ஆகும்.
இதேவேளை, நிலவி வரும் அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 4,099 ஆகும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 48 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 1,263 குடும்பங்களைச் சேர்ந்த 4,099 நபர்கள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.














