கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (18) ரூ. 14 கோடிக்கும் அதிகம் பெறுமதியான ‘குஷ்’ என்றழைக்கப்படும் பெருமளவு போதைப்பொருளைக் கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைது செய்தனர்.
சந்தேக நபர்கள் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தினூடாக பெங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க, விமான நிலையத்தை வந்தடைந்து கிறீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
இதன்போது சுங்க அதிகாரிகள் இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14.562 கிலோ கஞ்சாவைக் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், சந்தேக நபர்கள் கொழும்பு, தெமட்டகொடவைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவர்.
மேலதிக விசாரணைக்காக இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.














