அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகக் காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் விதிக்கவுள்ள புதிய சுற்று வரிகளைத் தவிர்ப்பதற்கான தீவிரப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சுமார் 20 பில்லியன் டாலர் (28 பில்லியன் கனடிய டாலர்) மதிப்புள்ள கனடிய இறக்குமதிகள் மீது புதிய 50% வரிகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளன.
இந்நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் கனடியப் பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த ஒரு வாரமாக வாஷிங்டனில் முகாமிட்டு, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் தொடர் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தைகள் கடினமாக இருப்பதை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், “எங்கள் பணி இன்னும் முடிவடையவில்லை” என கனடிய வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கனடிய பிரதமர் மார்க் கார்னி,
“பேச்சுவார்த்தைகள் மிகவும் நுட்பமாகவும் தீவிரமாகவும் நடைபெற்று வருவதால், இது குறித்துப் பொதுவெளியில் பேச முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனடா வலுவான நிலையிலேயே பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் கூறியபோதிலும், வர்த்தக விஷயத்தில் கனடா “மோசமாக” நடந்து கொள்வதாகவும், உடன்பாடு எட்டாவிடில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.














