‘எபோலா’ வைரஸ் பரவல் காரணமாக, எதிர் வரும் 28ம் திகதி டில்லியில் நடக்க இருந்த இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பு சார்பில், கடந்த 2008, 2011 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் உச்சி மாநாடுகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் எதிர்வரும் 28 முதல் 31ம் திகதி வரை இந்த கூட்டமைப்பின் நான்காவது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது.
இந்த மாநாட்டில், இருதரப்புக்கும் இடையே வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டது.
இதற்கிடையே, ஆப்ரிக்காவின் காங்கோ, உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளமையினால் உலக சுகாதார அமைப்பு இதை சர்வதேச அளவிலான பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் உச்சி மாநாடு நிகழ்வுகளை நடத்துவது குறித்து, ஆப்ரிக்க யூனியன் தலைவர் மற்றும் ஆப்ரிக்க யூனியன் கமிஷன் ஆகியவற்றுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்திய நிலையில் இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாட்டை ஒத்திவைக்க முடிவு செய்யப் பட்டது.
இதேவேளை, மாநாட்டிற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.












