முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம் மருத்துவச் சிகிச்சை ஒன்றுக்கு உதவுமாறு தமிழ் மக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த சிகிச்சை இடம்பெறவில்லை என்றால் அது அவருடைய உயிருக்குத் தீங்காக மாறலாம்.அந்த அறிவிப்பு வந்த சில நாட்களுக்குள்ளேயே அவர் கேட்ட தொகையின் முக்கால்வாசிக்குக் கிட்ட அவருக்கு சேர்ந்து விட்டது என்று கணிக்கக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் அவருக்கு உதவி செய்த பலரும் உதவி செய்த தொகையை முகநூலில் பதிவிட்டு வருகிறார்கள்.அது தொடர்பாக விமர்சனங்கள் உண்டு.எனினும் அவ்வாறு உதவி செய்தவர்கள் அதைப் பகிரங்கப்படுத்துவதன் மூலம் மற்றவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்ற ஒரு பதிலும் அங்கே உண்டு.முகநூல் பதிவுகளில் காட்டப்பட்டிருக்கும் தொகை சரியாக இருந்தால், கூட்டிப்பார்த்தால் இக்கட்டுரை எழுதப்படும் நேரத்தில் சிவாஜிலிங்கம் எதிர்பார்த்த தொகையின் மூன்றில் இரண்டு பங்கு அவருக்கு கிடைத்துவிட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிவாஜிலிங்கம் ஆயுதப் போராட்டப் பாரம்பரியத்தில் வந்தவர்.பின்னர் மிதவாத அரசியலுக்குள் வந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் மாகாண சபை உறுப்பினராகவும் இருந்தவர்.நான் பார்த்த காலமெல்லாம் அவர் வசதி குறைந்த ஒரு மனிதனாகவே தோன்றினார்.போரில் காயமடைந்த ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்தார்.பிள்ளைகள் இல்லை.முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது தனக்கு கிடைத்த வாகனத்தையும் அவர் விலைக்கு கொடுத்து விட்டார். பின்னர் அதே வாகனத்தை முக்கால் பழசாகிய நிலையில் சிறிய அளவு பணத்தைக் கொடுத்து மீண்டும் பெற்று கொஞ்சக் காலம் ஓடித்திருந்தார். ஒருமுறை அந்த வாகனத்தில் நானும் அவரோடு கிளிநொச்சிக்குப் போனேன். திரும்பி வரும்பொழுது சொன்னேன், “அண்ண பேசாமல் ரெண்டு பேரும் பஸ்ஸில ஏறிப் போயிருக்கலாம்” என்று.அந்த அளவுக்கு அந்த வாகனம் இரும்புக் கடைக்குக் கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது.பின்னர் அதையும் விற்றுவிட்டார்.ஓடடோவில்தான் திரிவார்.
சிவாஜியின் எளிமை, அவருடைய துணிச்சல், ஒருவகையில் கிறுக்குத்தனம் என்பவற்றால் அவருக்கு அபிமானிகள் உண்டு. கடந்த பல ஆண்டுகளாக அவர் காலில் ஒரு பெரிய பந்தத்தையும் கட்டிக்கொண்டு இழுத்து இழுத்து நடந்து போகும் காட்சி தமிழ்த் தேசிய அரசியலின் குறியீடு போலத் தோன்றும்.
அரசியல் ரீதியாக உணர்ச்சிகரமான ஒரு காலகட்டத்தில் சிவாஜி அந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். இன அழிப்பை நினைவு கூரும் மே மாதத்தில் அவருடைய அந்த அறிவிப்பு வந்ததும் அதை நோக்கி அதிகளவு கவனம் குவிக்கப்பட ஒரு காரணம்.
மனிதாபிமானக் காரணங்களுக்காக வசதி படைத்தவர்கள்,ஏன் வசதி இல்லாதவர்கள்கூட பிறருக்கு உதவுவார்கள் என்பதற்கு இது ஆகப்பிந்திய ஓர் உதாரணம்.இந்த உதாரணத்தை முன்வைத்து ஒரு முக்கியமான விவாதப் பரப்பை இங்கே திறப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
சிவாஜிலிங்கத்தைப் போலவே பிறர் உதவிகளை எதிர்பார்க்கும் ஒரு பெரிய தொகை தமிழ்ச் சமூகத்தில் இப்பொழுது உண்டு. இவர்களுக்குள் முன்னால் இயக்கத்தவர்கள்,இயக்கத்தவர்களின் குடும்பங்கள்,தியாகிகளின் குடும்பங்கள் போன்ற வகையினர் அடங்குவர்.புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருந்தும் உள்நாட்டுத் தனவந்தர்கள் மத்தியிலிருந்தும் கொடையாளிகள் அவர்களுக்கு ஓரளவுக்கு உதவுகிறார்கள்.கடந்த 17 ஆண்டுகளாக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஏதோ ஒரு விதத்தில் உதவிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த உதவிகள் ஒருங்கிணைக்கப்படாதவை. யாருக்கு உதவி தேவை? எப்படிப்பட்ட உதவி தேவை? போன்ற விடயங்களில் பொருத்தமான புள்ளி விபரங்கள் ஒரு மையத்தில் சேகரித்து வைக்கப்படவில்லை.அதனால் உதவியவர்களுக்கே திரும்ப உதவும் நிலைமைகளும் உண்டு.அதைத் திட்டமிட்டுச் சுரண்டுபவர்களும் உண்டு.சிலருக்கு உதவிகளை கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக பிறரிடம் உதவி கேட்கக் கூச்சப்படும் ஒரு பகுதி உண்டு. இது எல்லாக் கொடையாளிகளின் கவனக் குவிப்புக்கும் வெளியே நிற்கிறது.
மற்றவர்களிடம் உதவி கேட்பதற்கு எல்லாராலும் முடியாது.சிலருடைய தன்மானம் அவ்வாறு உதவி கேட்பதற்கு இடம் கொடுப்பதில்லை.அதனால் உதவி கிடைக்காமல் தொடர்ந்தும் கஷ்டப்படுகின்ற ஒரு தொகுதி உண்டு. அது தொடர்பாகவும் சரியான புள்ளி விபரங்கள் இல்லை.ஆனால் ஆயுத மோதல்களுக்குப் பின்னரான அதிகரித்ததொகை மக்கள் பிறர் உதவிகளுக்காகக் காத்திருக்கும் ஒரு சமூகம் இது. ஒருபுறம் நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம்.இன்னொருபுறம் உதவிகளுக்காகக் காத்திருக்கும் தாயகத்து உறவுகள்.இந்த இரண்டையும் அரசில்லாத ஒரு சமூகம் எப்படி ஒருங்கிணைப்பது?
2009க்குப் பின்னரான தமிழ்த் தேசியத்தின் பிரதான கூறாகக் காணப்படுவது தொண்டு செய்வது.”தொண்டுத் தேசியம்”. தமது அரசியல் இலக்குகளுக்காக பெரிய அளவுக்குத் தியாகம் செய்யத் தயாராக இல்லாத அரசியல் செயற்பாட்டாளர்கள் குறைந்தபட்சம் தமது மக்களுக்கு அல்லது வாக்காளர்களுக்குத் தொண்டாவது செய்யலாம்.
2009க்குப்பின் தமிழ் மக்கள் மத்தியில் பலர் பிறர் உதவிகளில் தங்கி இருக்கிறார்கள்.ஆனால் வாய்விட்டுக் கேட்க வெட்கப்படுகின்ற, வாய்விட்டுக் கேட்பதற்கு தன்மானம் இடங்கொடுக்காத ஒருபகுதியினர் ஒதுக்கமாக இருக்கிறார்கள்.குறிப்பாக போராட்டப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் அப்படி வாய்விட்டு உதவி கேட்பது குறைவு.அவர்கள் அவ்வாறு கேட்பதற்கு அவர்களுடைய தன்மானம் இடம் கொடுப்பதில்லை.தங்களால் இயன்ற தொழிலைச் செய்து.கிடைக்கின்ற சிறிய வருமானத்தில் குடும்பத்தைச் சமாளிக்கலாம் என்று அவர்கள் இப்பொழுதும் நம்புகிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் பொருத்தமான சிகிச்சைகள் இன்றி இறந்து கொண்டுமிருக்கிறார்கள்.
வாய்விட்டு உதவி கேட்க கூச்சப்படுகின்றவர்கள் மத்தியில் போரில் தமது உறுப்புகளை இழந்தவர்கள்,இப்பொழுதும் உடம்பில் உலோக பாகங்களை ஏந்திக்கொண்டு திரிபவர்கள்,முதுகெலும்பு பாதிக்கப்பட்டவர்கள்,சக்கர நாற்காலிகளில் திரிபவர்கள், குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரிவினால் தனித்து விடப்பட்டவர்கள்…. என்று ஒரு தொகை உண்டு.
ஒருகாலம் மெய்க்காவலர்கள் சூழ மிடுக்காகத் திரிந்த சில பொறுப்பாளர்கள் இப்பொழுது கைவிடப்பட்டவர்களாக, உதவி கிடைக்காதவர்களாக, அதைவிட முக்கியமாக வாய்விட்டு உதவி கேட்கக் கூச்சப்படுகிறவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு உதவவேண்டியது ஒரு தேசியக் கடமை.அதை உதவி என்றும் அழைக்க முடியாது. அது ஒரு தேசியக் கடமை. இப்பொழுதும் உயிருடன் இருப்பவர்கள், ஒப்பீட்டளவில் வளமாக வாழ்பவர்கள், ஒரு காலம் தம்மைத் தியாகித்தவர்களுக்கு,அவர்களுடைய குடும்பங்களுக்குக் கொடுக்கின்ற சன்மானம் அது.தானமல்ல.
வட மாகாண அமைச்சராக இருந்த டெனிஸ்வரன் முன்னாள் இயக்கத்தவர்களின் விபரப் பட்டியல் ஒன்றைத் தயாரித்தார். புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றிடமும் குறிப்பிட்ட தொகுதி உதவி தேவைப்படுவோரின் விபரப் பட்டியல் உண்டு.உதாரணமாக இரண்டு கண்களையும் இழந்தவர்களுக்கு பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கும் தன்னார்வ நிறுவனம் ஒன்று உதவி செய்கிறது. அதுபோலவே முள்ளந் தண்டு பாதிக்கப்பட்டவர்கள்,இடுப்புக்குக் கீழ் வழங்காதவர்கள்,சக்கர நாற்காலிகளில் திரிபவர்கள்,மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்கள்… போன்றவர்களுக்கு உதவுவதற்கென்று “உயிரிழை” போன்ற அமைப்புகள் இயங்குகின்றன.அங்கே புலம்பெயர்ந்த தமிழர்கள் தாராளமாக உதவுகிறார்கள்.
எனினும் இந்த உதவி கிடைக்காத ஒரு தொகுதி இப்பொழுதும் உண்டு. இந்த உதவிகள் யாவும் ஒரு மையத்தில் இருந்து ஒருங்கிணைக்கப்படவில்லை.ஒரே மையத்தில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களும் இல்லை.ஏனென்றால் அரசில்லாத தமிழ் மக்கள் மத்தியில் இந்த விடயங்களை ஒன்றிணைப்பதற்கு ஒருங்கிணைந்த அமைப்பு எதுவும் இல்லை.ஓர் அரசு இந்த விடயங்களை ஒருங்கிணைப்பதுபோல அரசற்ற மக்கள் மத்தியில் ஏதாவது ஒரு மைய அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட அமைப்பு எதுவும் ஈழத் தமிழர்கள் மத்தியில் இப்பொழுது இல்லை.
அப்படி ஒர் அமைப்பு இருந்திருந்தால் சிவாஜிலிங்கம் முகநூலில் ஊடகங்கள் ஊடாக பகிரங்கமாக ஒரு வேண்டுகோளை முன் வைத்திருக்கத் தேவைப்பட்டிருக்காது. ஒருவிதத்தில் சமூக வலைதளச் சூழல்தான் சிவாஜிக்கு உதவத் தூண்டும் உளவியலைத் தயாரித்தது.போராட்டத்தில் ஈடுபட்டுச் சொத்துக்களை இழந்தவர்கள்,சுகங்களை இழந்தவர்களுக்குரிய தேவைகளைக் கவனிப்பதற்கு,அவர்களைப் பராமரிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் எவையும் மையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படவில்லை.
தமிழ்த் தேசிய அரசியலானது தமிழ் மக்களையும் தமிழ் மக்களுடைய வளங்களையும் ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதன் பின்னணியில்தான் அவ்வாறு ஒருங்கிணைக்க முடியாமல் இருக்கிறது.”மூஞ்சூறு தான் போற வழியைத் தெரியாமல் விளக்கு மாறையும் தூக்கிக்கொண்டு போனதாம்” என்ற பழமொழியைப் போல,தன் அரசியல் இலக்குகளை நோக்கிப் போராட முடியாத ஒரு மக்கள்கூட்டம்,போரினால் பாதிக்கப்பட்ட தனது சமூகத்தின் ஒரு பகுதியைப் பராமரிப்பதற்குத் தேவையான மைய அமைப்புகளைக் கட்டியெழுப்ப முடியாதிருக்கிறது.
அண்மை ஆண்டுகளாக,குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தபின், ஒரு விடயத்தைத் தொடர்ச்சியாகக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. கடந்த மே 19ஆம் திகதியும் அதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அரசுத் தலைவர் அனுர யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் மாற்றுத் திறனாளிகளாக உள்ள படையினருக்கு முன்னுரிமை வழங்குகிறார்.போன ஆண்டு அவர் மாற்றுத் திறனாளிகளான படையினர் தங்கியிருக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களைக் கௌரவித்தார்.இந்த ஆண்டு போரில் மாற்றுத் திறனாளிகளாக்கப்பட்ட படையினர் சக்கர நாற்காலிகளில் அமர்ந்து வரிசையாக அணிவகுத்து வந்தார்கள்.அது சக்கர நாற்காலிகளின் ராணுவ அணிவகுப்பு.அதாவது போர் வெற்றிக் கொண்டாட்டம் எனப்படுவது,அந்த வெற்றிக்காக உறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்ட படை வீரர்களைக் கௌரவிப்பதுதான் என்று இந்த அரசாங்கம் நிரூபிக்க முயற்சிக்கிறது.
ஓர் அரசாங்கமாக அவர்கள் போரில் காயமடைந்த,அவயவங்களை இழந்த படைத்தரப்பினரையும் அவர்களுடைய குடும்பங்களையும் பராமரிக்கிறார்கள்,கௌரவிக்கிறார்கள்.ஆனால் அரசில்லாத தமிழ் மத்தியில் அவ்வாறான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் இல்லை.
மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் குடும்பங்கள் கௌரவிக்கப்படுகின்றன. ஆனால் மாவீரர் நாள் முடிந்தபின் அந்த குடும்பங்கள் என்னவாகின? எப்படி ஜீவிக்கின்றன? என்பதைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கும் பராமரிப்பதற்கும் உரிய ஏற்பாடுகள் இல்லை.முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின்போது கஞ்சி சமைத்துப் பகிர்வது போலவே,போரினால் பாதிக்கப்பட்ட,அதேசமயம் பிறர் உதவிகளை எதிர்பார்க்கின்ற குடும்பங்களுக்கும்,பிறரிடம் உதவி கேட்கக் கூச்சப்படும் குடும்பங்களுக்கும் உதவ வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு.தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு உண்டு.குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு உண்டு.
ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தில் அந்த மோதல்களால் பாதிக்கப்பட்ட தரப்புக்கு உதவுவது என்பது நன்றிக் கடன் தீர்ப்பதுதான்.அது ஒரு தேசியக் கடமை.அப்படி அவர்களுக்கு உதவினால்தால் அடுத்த தலைமுறை போராட்டத்தை மதிக்கும்.அவ்வாறு உதவுவதற்கு தேவையான பொருத்தமான அமைப்புகளை உருவாக்குவது என்பது ஒரு தொண்டு மட்டும் அல்ல. அதைவிட ஆழமான பொருளில் தேசத்தை நிர்மாணிப்பது என்ற நோக்கு நிலையில் இருந்து அவ்வாறான அமைப்புக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.













