நியூ சண்டிகரில் நேற்றிரவு நடந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிடம் 47 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து வெறியேறியுள்ளது.
இந்த நிலையல், புது சண்டிகரில் நாளை நடைபெறவுள்ள தகுதிச்சுற்று-2 போட்டியில் ராஜஸ்தான் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, மே 31 அன்று அகமதாபாத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் 2026 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடும்.
முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் மைதானத்தில் நேற்றிரவு முதலில் துடுப்பாட்டம் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்கள் எடுத்தது.
இதற்கு பதிலளித்த ஹைதராபாத் அணி, 19.2 ஓவர்களில் 196 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு ஒரு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
இருவரும் வெறும் 7.6 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 125 ஓட்டங்களை சேர்த்தனர்.
சூர்யவன்ஷி 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 97 ஓட்டங்கள் எடுத்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதேபோல், ஜெய்ஸ்வால் 29 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர், துருவ் ஜூரல் 21 பந்துகளில் 50 ஓட்டங்களை விளாசினார், அதே நேரத்தில் அணித் தலைவர் ரியான் பராக் 12 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்தார்.
இறுதியில், ரவீந்திர ஜடேஜா 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஹைதராபாத் அணிக்காக பிரஃபுல் ஹிங்கே மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக விளங்கினார்.
அவர் 4 ஓவர்களில் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எஷான் மலிங்க, ஷிவாங் குமார் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
இருப்பினும், அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 64 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து மிகவும் அதிக ஓட்டங்களை கொடுத்தார்.
244 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்தியபோது ஹைதராபாத்தின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது.
முதல் ஓவரிலேயே ஜோஃப்ரா ஆர்ச்சர், அபிஷேக் ஷர்மாவை ஓட்டங்களை ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்கச் செய்தார்.
பின்னர், இஷான் கிஷன் (33) மற்றும் டிராவிஸ் ஹெட் (17) ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
அதன்பிறகு, நிதிஷ் ரெட்டி 38 ஓட்டங்களுடன், சலில் அரோரா 35 ஓட்டங்களும் எடுத்துத் தடுமாறினர்.
இறுதியில் அந்த அணி 19.2 ஓவர்களில் 196 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
ராஜஸ்தானின் பந்துவீச்சில் ஆர்ச்சர் மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
அவர் 4 ஓவர்களில் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நந்த்ரே பர்கர், ரவீந்திர ஜடேஜா மற்றும் சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், யாஷ் புஞ்சா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
நேற்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக விளங்கிய 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.













