ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரண வழக்கு விசாரணைக்காக, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதர முஹந்திரம்கே ஆகியோரை சாட்சியம் வழங்குவதற்கு, அழைப்பது தொடர்பான தீர்மானத்தை ஜூன் மாதம் இரண்டாம் திகதி அறிவிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் வழக்கின் முன்னேற்றம் தொடர்பாக, கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
கபில சந்திரசேனவிற்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், சட்டத்தரணிகளாக முன்னிலைப்பட்டிருந்த, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் அவரது கனிஸ்ட சட்டத்தரணி உதர முஹந்திரம்கே ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இருவருக்கு எதிரான நீதிமன்றம் அழைப்பாணை விடுக்காத நிலையில், ஊடக செய்திகளின் பிரகாரம் இரண்டு சட்டத்தரணிகளும் இன்று நீதிமன்றத்தில் முன்நிலையாகியுள்ளதாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் பின்னர் நீதவான், பொலிஸாரிடம் ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் அவரது கனிஸ்ட சட்டத்தரணியிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியிருந்த நிலையில் வாக்குமூலங்களை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எழுப்பிய விடயங்கள் தொடர்பான காரணிகளை முன்வைக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
மரணம் சம்பவித்த தினத்தின், மாலைவேளையில், அரவிந்த டி சில்வாவின் வீட்டிற்கு ஒரு குழுவினர் வந்துள்ளதாகவும் அக்குழுவினர் பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவின் அலுவலகத்திற்குச் சென்று கலந்துரையாடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
மேலும் அரவிந்த டி சில்வாவின் மனைவியின் கைபேசி மூலம் ரியன்சி அர்சகுலரத்னவிற்கும் மரணமடைந்த கபில சந்திரசேனவிற்கும் இடையில் உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன? என்பதைக் கண்டறிவதற்காகவே சட்டத்தரணிகள் சாட்சியத்திற்கு அழைக்கப்பட்டிருந்தாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேலும் தெரிவித்திருந்தனர். இருதரப்பு காரணிகளையும் பரிசீலித்த நீதவான்,இரண்டு சட்டத்தரணிகளையும் சாட்சியத்திற்கு அழைப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை ஜூன் மாதம் 02 ஆம் திகதி அறிவிப்பதாக உத்தரவிட்டிருந்தார்.















