உக்ரைனுடனான போருக்கு மத்தியில், நேட்டோ (NATO) அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ருமேனியா நாட்டின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ரஷ்யாவின் வெடிகுண்டு ட்ரோன் விண்கலம் மோதி வெடித்துள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்று (29) ருமேனியாவின் கிழக்கு எல்லை நகரான கலாட்டியில் அமைந்துள்ள 10 மாடிக் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீதே இந்த ட்ரோன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், கட்டிடத்தில் பயங்கர தீப்பரவலும் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் போர் ஆரம்பமான கடந்த நான்கு வருட காலப்பகுதியில் ருமேனிய எல்லைக்குள் ரஷ்ய ட்ரோன்கள் விழுந்துள்ள போதிலும், ருமேனிய குடிமக்கள் காயமடைந்தது இதுவே முதல் முறையாகும்.
ருமேனியாவின் அவசரநிலை அதிகாரசபை மற்றும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விபரங்களின் படி,
‘ஷாப்ரோபிரெட்டி 136’ என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் ‘கெரான் 2’ ரக ட்ரோன் விண்கலமே இவ்வாறு மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் ட்ரோனில் இருந்த முழு வெடிபொருட்களும் வெடித்ததால் 10ஆவது மாடியில் பெரும் தீ ஏற்பட்டது.
தீயணைப்புப் படையினர் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததோடு, கட்டிடத்தில் இருந்த சுமார் 70 பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
காயமடைந்த இருவர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ட்ரோன் எல்லையைக் கடந்ததை அடுத்து ருமேனியாவின் இரண்டு எஃப்-16 (F-16) போர் விமானங்கள் உடனடியாக விண்ணுக்கு அனுப்பப்பட்டன.
எனினும், ட்ரோன் கண்டறியப்பட்டதில் இருந்து அது கட்டிடத்தில் மோதுவதற்கு இராணுவத்திற்கு வெறும் 4 நிமிடங்களே அவகாசம் கிடைத்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ருமேனிய ஜனாதிபதி நிகுஷோர் டான் (Nicușor Dan) நாட்டின் உயர்மட்டப் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
“போர் தொடங்கிய பின்னர் ருமேனிய மண்ணில் ஏற்பட்ட மிகக் கடுமையான விபத்து இது” என அவர் வர்ணித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவி உர்சுலா வொன் டெர் லேயன்: “ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் இப்போது மற்றொரு எல்லையைத் தாண்டியுள்ளது. எங்களது கிழக்கு எல்லையின் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு ரஷ்யா மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிப்போம்” என எச்சரித்துள்ளார்.
ருமேனிய இராணுவத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஜியோர்ஜி மாக்சிம் இது குறித்துக் கூறுகையில், “உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ளது, ஆனால் ருமேனியா அமைதியாக இருக்கிறது. எங்களால் உக்ரைன் வான்பரப்பிற்குள் ஏவுகணைகளை ஏவ முடியாது என்ற சர்வதேசச் சட்டக் கட்டுப்பாடு உள்ளதால் எங்களால் எல்லையிலேயே அதனை அழிக்க முடியாமல் போனது. இது ருமேனியா மீதான நேரடித் தாக்குதல் அல்ல, எல்லையில் நடக்கும் போரின் பக்கவிளைவு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் புகாரெஸ்டில் உள்ள ரஷ்ய தூதருக்கு ருமேனிய வெளியுறவு அமைச்சு அவசர அழைப்பு விடுத்து கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பிரான்ஸ் நாடும் ரஷ்ய தூதரை அழைத்து இதற்குக் கண்டனம் தெரிவிக்கவுள்ளதாகக் கூறியுள்ளது.
டானூப் நதியோரம் அமைந்துள்ள இந்த எல்லைப் பகுதியைக் கண்காணிப்பது மிகவும் கடினமானது என்றும், போர் தொடங்கியதில் இருந்து 47 முறை ரஷ்ய ட்ரோன் பாகங்கள் ருமேனிய மண்ணில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

















