இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நோயாளிகளின் உரிமைகளையும், அவர்களின் கருத்துக்களையும் பாதுகாத்து வரும் சுதந்திரமான அமைப்பான ‘ஹெல்த்வாட்ச்’ (Healthwatch) நிறுவனத்தைக் கலைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து உள்ளூராட்சி சபைகளின் கூட்டமைப்பு (LGA) கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைகளில் நோயாளிகளின் கருத்துக்களைக் கேட்டு, உள்ளூர் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவதற்காகச் செயல்படும் ஒரு வலுவான, சுதந்திரமான அமைப்பே இந்த ‘ஹெல்த்வாட்ச்’ ஆகும்.
ஹெல்த்வாட்ச் அமைப்பைக் கலைப்பது ஒட்டுமொத்தப் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பையும் சிதைத்துவிடும் எனவும் இது சுகாதாரத் துறையின் பொறுப்புக்கூறலை முற்றிலுமாக சீர்குலைக்கும் எனவும் உள்ளூராட்சி சபைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுயாதீனமான, உள்ளூர் சமூகங்களின் குரலாக ஒலிக்கும் ஓர் அமைப்பு இல்லாவிட்டால், தவறுகள் மீண்டும் மீண்டும் நிகழவும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் போகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன எனவும்
இது ஒரு “பாரிய பின்னடைவு” என உள்ளூராட்சி சபைகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
தற்போதைய ஹெல்த்வாட்ச் அமைப்பின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாக்கும் வகையிலான, நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு தெளிவான மாதிரியை (Model) உருவாக்குவதற்கு உள்ளூர் அரசாங்கங்களுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்ற வேண்டும் என உள்ளூராட்சி சபைகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.














