இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும், கடலடி கேபிள்களைப் பாதுகாக்கவும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டிற்குள் அதிநவீன நீர்க்கீழ் ட்ரோன்களை உருவாக்கவுள்ளன. இதற்குப் பிரித்தானியா 150 மில்லியன் பவுண்டுகளை நிதியுதவியாக வழங்கவுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில், மூன்று நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் இணைந்து இந்த உத்தியோகபூர்வ கூட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆளில்லா நீர்க்கீழ் வாகன தொழில்நுட்பம் அடுத்த ஆண்டிற்குள் முழுமையாகத் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த செலவு விபரம் வெளியிடப்படவில்லை என்றாலும், பிரித்தானியா தனது பங்களிப்பாக 150 மில்லியன் பவுண்டுகளை இதற்காக முதலீடு செய்யும் எனப் பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) தெரிவித்துள்ளார்.
ஆக்கஸ் கூட்டணியின் திட்டங்கள் மிகவும் மெதுவாக நகர்வதாகக் கூறப்படும் விமர்சனங்களை ஒப்புக்கொண்ட ஜோன் ஹீலி, “ஆக்கஸ் அமைப்பில் நீண்டகாலமாக நாம் அதிகமாகப் பேசினோம், ஆனால் மிகக் குறைவாகவே சாதித்தோம். நமது மூன்று அரசாங்கங்களின் கீழ் இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆக்கஸ் (Aukus) பாதுகாப்பு உடன்படிக்கையின் முக்கிய நோக்கம், அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதும், இராணுவத் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்வதுமாகும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் கடற்படை ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், தென் சீனக் கடல் போன்ற சர்ச்சைக்கரிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குமான ஒரு முக்கிய நகர்வாகவே இந்த புதிய ட்ரோன் தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது.
இந்த நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பமானது ஆக்கஸ் கூட்டணியின் ‘பில்லர் டூ’ (Pillar Two) திட்டத்தின் கீழ் வரும் முதலாவது முக்கிய மைல்கல் திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் அதிதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், கடலடி ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற மேம்பட்ட பாதுகாப்புத் திறன்களை உருவாக்க இந்நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த புதிய ட்ரோன்கள் கடலடி உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதுடன், எதிரிகள் மீது தாக்குதல் நடத்துதல், உளவு பார்த்தல், கண்காணிப்பு மற்றும் விநியோகப் போக்குவரத்து போன்ற பலதரப்பட்ட இராணுவப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















