இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை உயர்த்திய போதிலும், தற்போதைக்கு பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக, நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கட்டண உயர்வை மறுத்துள்ள போதிலும், திடீர் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கு இடைக்கால கட்டண உயர்வு வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ,
எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவிருக்கும் வழக்கமான வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு இன்னும் ஒரு மாதம் உள்ளதால், அதற்கு முன்னதாக இந்த ஜூன் மாதத்தில் ஓர் இடைக்கால பேருந்து கட்டண திருத்தத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அமல்படுத்த வேண்டும்.
அதன்படி, வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்சம் 5 சதவீத பேருந்து கட்டண உயர்வை அரசாங்கத்திடம் இருந்து தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்த கட்டண திருத்தத்திற்கு முன்பாகவே பேருந்து கட்டணங்களை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து சங்கம் விடுத்துள்ள கோரிக்கை குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதுவரை சாதகமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இதனால் தற்போதைக்கு பழைய கட்டணமே நீடிக்கும் என்பதால் அன்றாட பேருந்து பயணிகள் தற்காலிக நிம்மதியடைந்துள்ளனர்.













