ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் ஏற்பட்ட திடீர் இரசாயன விபத்து காரணமாக, அப்பகுதியிலுள்ள வீடுகளிலிருந்து பொதுமக்கள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டுள்ளனர்.
கிளாஸ்கோவின் லென்சி டெரஸ் (Lenzie Terrace) பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த அச்சுறுத்தலான இரசாயனச் சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று (மே 31) பிற்பகல் 3:30 மணியளவில் இந்த இரசாயனக் கசிவு குறித்துப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர மருத்துவப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விபத்து நடந்த வீட்டைச் சுற்றியுள்ள அண்மைய வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் உடனடியாக வௌியேற்றப்பட்டனர்.
அப்பகுதியில் நச்சு வாயு அல்லது இரசாயனத் தாக்கம் பரவும் அபாயம் இருந்ததால், பொதுமக்கள் யாரும் அந்த வீதிப் பக்கமாக வர வேண்டாம் எனப் பொலிஸார் கடுமையான அறிவுறுத்தல்களை விடுத்திருந்தனர்.
தீயணைப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் தீவிரமாகப் பணியாற்றி, இரசாயனப் பாதிப்புகளை அகற்றியதை அடுத்து, இன்று (ஜூன் 1) காலையுடன் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து வௌியேறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மற்றும் வௌியேற்றப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காகப் பொலிஸார் இன்னும் சம்பவ இடத்தில் நிலைகொண்டுள்ளதுடன், உதவி தேவைப்படுவோர் நேரடியாக அதிகாரிகளை அணுகலாம் அல்லது ஸ்காட்லாந்து பொலிஸாரைத் (Police Scotland) தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.















