தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டமைக்காக நான்கு நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீனா ஓராண்டு பயணத் தடை விதித்துள்ளது.
நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சீனா இத்தகைய நடவடிக்கையை எடுப்பது இதுவே முதல் முறையாகும் என்று வெலிங்டனின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் தாய்வானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
அந்தப் பயணத்தின்போது, தாய்வான் வெளிவிகார அமைச்சர் லின் சியா-லுங் (Lin Chia-lung) உட்பட பல்வேறு உயர் அதிகாரிகளுடன் அவர்கள் சந்திப்புகளை நடத்தினர்.
உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தாய்வான் பயணத்திலிருந்து திரும்பிய பின்னரே சீனா விதித்த தடை குறித்த தகவலைப் பெற்றனர்.
மன்னிப்புக் கோரப்பட்டால், தடையைக் குறைக்கலாம் அல்லது நீக்கலாம் என்று சீனத் தூதரகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தடைக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களில், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த மௌரீன் பக் (Maureen Pugh), டேவிட் வில்சன் (David Wilson), லாரா மெக்ளர் (Laura Mcclur ) மற்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த டங்கன் வெப் (Duncan Webb) ஆகியோர் அடங்குவர்.
நியூசிலாந்து 1972-ல் சீனாவுடன் முறையான தூதரக உறவுகளை ஏற்படுத்தியதுடன், அன்று முதல் ‘ஒரே சீனா கொள்கையை’ கடைப்பிடித்து வருகிறது.
இந்தக் கொள்கையின்படி, நியூசிலாந்து பெய்ஜிங்கை மட்டுமே சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கமாக அங்கீகரிக்கிறது மற்றும் தாய்வானுடன் முறையான தூதரக உறவுகளைப் பேணுவதில்லை.
இருப்பினும், பல நாடுகளைப் போலவே, நியூசிலாந்தும் தாய்வானுடன் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற மட்டங்களில் வழக்கமான பரிமாற்றங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தாய்வானுக்கு பயணித்த அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு சீனா இதற்கு முன்பும் தடை விதித்துள்ளது.
2022-ல் நான்சி பெலோசி (Nancy Pelosi’s) தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டமைக்காக சீனா அவருக்குத் பயணத் தடை விதித்தது.
அதேபோல், 2023 இல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மெக்காலுக்கும் (Michael McCaul) சீனா தடை விதிப்பதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.















