நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட மூன்று நாட்கள் கொண்ட விசேட தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் முதலாம் நாள் சோதனைகளின் போது 2,000-க்கும் மேற்பட்ட வளாகங்களில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட முப்பகல் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் நேற்று (ஜூன் 08) 14 மாவட்டங்களைச் சேர்ந்த 72 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஆரம்பமானது.
நாளை (ஜூன் 10) வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் இரண்டாம் நாள் சோதனைகள் இன்று நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, நேற்று (08) நடைபெற்ற முதலாம் நாள் சோதனையின் ஒட்டுமொத்தத் தரவுகள் வருமாறு:
பரிசோதிக்கப்பட்ட மொத்த வளாகங்கள்: 31,196
அபாயகரமான இடங்கள் உள்ள வளாகங்கள்: 8,121
டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டறியப்பட்டவை: 2,097
விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தல்கள்: 1,165
எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள்: 789
நேற்றைய சோதனைகளின் போது பாடசாலைகள், கட்டுமானப் பகுதிகள் மற்றும் அரச நிறுவனங்கள் போன்றவற்றில் டெங்கு நுளம்புகள் பெருகும் போக்கு மிக உயர்ந்த மட்டத்தில் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று சோதனையிடப்பட்ட பாடசாலைகளில் 31 சதவீதமான பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய மிக அபாயகரமான சூழல் காணப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலவும் காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றாடலை எப்போதும் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்குப் பொறுப்புடன் செயற்படுமாறும், இந்த 3 நாள் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்குத் பொதுமக்கள் தங்களது அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அமைச்சு அவசர விடுக்கோள் விடுத்துள்ளது.














