முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக ஒருநாள் அரைச்சதத்தை பதிவு செய்து, இந்திய ‘ஏ’ அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்சி இன்று (21) புதிய உலக சாதனை படைத்து சர்வதேச கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த அதிரடி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களைக் திணறடித்த அவர், எதிர்கொண்ட வெறும்11 பந்துகளில் தனது அரைச்சதத்தைக் கடந்து புதிய உலக சாதனையைப் பதிவு செய்தார்.
அவரது இந்த அசுரத்தனமான அதிரடி ஆட்டத்தில் 5 பிரம்மாண்ட ஆறு ஓட்டங்களும் , 5 நேர்த்தியான நான்கு ஓட்டங்களும் அடங்கும்.
அதாவது அவர் எடுத்த 50 ஓட்டங்களில் 50 ஓட்ட எல்லைகள் மூலமாகவே பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரைச்சதம் கடந்த பின்னரும் தனது அதிரடியைக் குறைக்காத வைபவ் சூர்யவன்சி, சதத்தை நோக்கி வேகமாக முன்னேறினார்.
மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைப் பறக்கவிட்ட அவர், வெறும் 29 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், இலங்கை அணியின் சஹான் ஆராச்சிகேவின் பந்துவீச்சில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.
இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ‘ஏ’ அணிகளுக்கு இடையே தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டி இதுவாகும்.
இறுதிப் போட்டி என்ற அழுத்தங்கள் ஏதுமின்றி, இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி வெளிப்படுத்திய இந்த உலக சாதனை ஆட்டம், மைதானத்தில் இருந்த ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் சர்வதேச விளையாட்டு ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
















