மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட போர் பதற்ற தணிப்பு மற்றும் அமைதி உடன்படிக்கையை அமுல்படுத்துவது தொடர்பான அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையிலான புதிய சுற்று உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தை இன்று (21) சுவிட்சர்லாந்தில் உத்தியோகபூர்வமாகத் தொடங்குகின்றது.
இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
அதேவேளை, ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரும் சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளனர்.
இப்பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
சுவிஸ் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டத் தவறினால், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும் அமெரிக்காவின் சார்பில் கடுமையான கட்டணம் விதிக்கப்படும் என அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இரு நாடுகளும் எட்டிய 14 அம்ச அமைதி உடன்படிக்கையின் முதல் நிபந்தனை, “அமெரிக்கா, ஈரான் மற்றும் போரின் பிற தரப்பினர் உடனடியாக ஒருவருக்கொருவர் எதிராகவும் லெபனானுக்கு எதிராகவும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்” என்பதாகும்.
இதன்படி அமெரிக்காவும் ஈரானும் தாக்குதல்களை நிறுத்திய போதிலும், இஸ்ரேல் இந்த முடிவை ஏற்கத் தயங்கியது.
பின்னர் கட்டார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேலும் லெபனானும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்ட போதிலும், இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி உடன்படிக்கையை மீறியுள்ளது.
இதன் காரணமாக, நேற்று (20) பிற்பகல் முதல் அனைத்து விதமான கடல்சார் போக்குவரத்துகளுக்காகவும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஈரானின் மத்திய இராணுவ கட்டளை தலைமையகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு அருகில் பயணிக்கும் சர்வதேச கப்பல்கள் எவையும் அதன் வழியாகச் செல்ல வேண்டாம் என ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படை (IRGC) எச்சரித்துள்ளது. இந்த உத்தரவை மீறிப் பயணிக்கும் கப்பல்கள், ஈரானிய நீர்மூழ்கி குண்டுகள் (Naval Mines) அல்லது கடற்படையின் நேரடித் தாக்குதல் இலக்குகளுக்கு ஆளாக நேரிடலாம் என்றும் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் விடுத்துள்ள அறிக்கையை அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் சர்வதேச கடல்சார் போக்குவரத்து எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மாத்திரம் 55 வணிகக் கப்பல்கள் இந்த நீரிணைச் சந்தியைக் கடந்து பாதுகாப்பாகப் பயணித்துள்ளதுடன், 17 மில்லியனுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் பீப்பாய்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க தரப்பு அமைதி உடன்படிக்கையில் தனக்குரிய பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றத் தவறினால், ஈரான் தனது தேசிய பாதுகாப்பிற்காக அடுத்தடுத்த அத்தியாவசிய நடவடிக்கைகளை எடுக்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பகாஹி தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்ற உத்தியோகபூர்வ எதிர்பார்ப்பிலேயே ஈரான் இதில் கையெழுத்திட்டது என்றும் அவர் ஈரானிய ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இன்றைய சுவிஸ் பேச்சுவார்த்தை சர்வதேச அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.















