பிரித்தானியாவில் கடுமையான வெப்ப அலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து பகுதிகளில் வெப்பநிலை 39 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதுடன், இது மனித உயிருக்கு ஆபத்தான நிலை எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதீத வெப்பம் காரணமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களில் 300-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பகுதியளவில் அல்லது முழுமையாக மூடப்பட்டுள்ளன.
அத்துடன், தண்டவாளங்கள் வளைந்துவிடும் அபாயம் உள்ளதால் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியத் தேவைகளின்றிப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என நாட்டின் மிகப்பெரிய ரயில் சேவை நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
வெப்ப அலை காரணமாக மின்சாரம் மற்றும் நீர் விநியோகத் தடைகள் ஏற்படக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.














